திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 2 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வருகின்றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்துள்ளது. சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் வாயு பரவியதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பெண்கள், 5 ஆண்கள் எனமொத்தம் 65 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு வாய், மூக்கு, கண், காதுகளில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. பெரியபாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்பெண்ணும், செங்குன்றம் அருகே உள்ள சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் ஒடிசாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
பெரிதும் பாதிப்புக்கு உள்ளான 7 தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாகஇருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், குமார் மற்றும் எம்எல்ஏக்கள் விஜயகுமார், ரவி, அருண்குமார் ஆகியோரும் மருத்துவமனைகளுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினர்.
இதற்கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழுவினர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றிய தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
3 பேர் கைது
அமோனியா வாயு கசிவு தொடர்பாக பெரியபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொழிற்சாலை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவி்த்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,
‘திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்
விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதும், பல தொழிலாளர்கள் காயமடைந்ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மேலும், சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைவில் குணமடைந்து முழு உடல்நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்த வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
நச்சு வாயுவை சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
கடந்த சில காலங்களாகவே தொழில் நடக்கும் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்வதும் அதனால் உயிர்பலிகள் உண்டாவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக