வியாழன், 21 மே, 2026

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு வந்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது மறைவின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அப்பா, நீங்கள் கனவு கண்ட திறமையான, வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் பொறுப்பை நான் முழுமையாக எனது தோள்களில் சுமப்பேன். உங்கள் போதனைகள், உங்கள் விழுமியங்கள், உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதில் ராஜீவ் காந்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளார். இளம் இந்தியாவின் ஆற்றலை முழுமையாக நம்பிய அவர், வாக்களிக்கும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். கிராம அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தார்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கணினி மயமாக்கல் ஆகியற்றின் வாயிலாக இந்தியாவை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி வழிநடத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நாட்டில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 17 மே, 2026

தமிழக அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் என்னென்ன..? - ஓர் அலசல்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே  17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 10:30 AM

சென்னை,

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. 

அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம்.

தற்போது முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றுள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு உள்ளது. 

அதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த நிலையில்,முதல்-அமைச்சர் மற்றும் 9 அமைச்சர்களுக்கும் நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் உள்ளிட்ட துறைகளும், ஊரக வளர்ச்சித்துறை ஆனந்துக்கும், பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், சுகாதாரம் அருண்ராஜுக்கும், செங்கோட்டையனுக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அந்த வகையில் வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளன.

இந்த துறைகளும் இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அதில் த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அளிக்கப்பட உள்ளதாக த.வெ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது.

கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்- தமிழக முதல்வர் விஜய், ராகுல்காந்தி, பங்கேற்பு - நாளை பதவி ஏற்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே  17, 2026, வைகாசி, 03, பாரபவ வருடம் 09:30 AM

திருவனந்தபுரம், கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெளியானது. 

மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ் 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றியது. 

மேலும் கேரள காங்கிரஸ்(ஜோசப்) 7 இடங்களிலும், புரட்சி சோஷியலிஸ்ட் கட்சி(ஆர்.எஸ்.பி.) 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கேரள மாநில கட்சி (சி.எம்.பி.கே.எஸ்.சி.) தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள்(காங்கிரஸ் ஆதரவு) 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா முதன் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.

காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றி மூலம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பதவி காலம் அத்துடன் முடிவுக்கு வந்தது. 

இதற்கிடையே, காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவியது. 

10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது..

இதையடுத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரை, வி.டி.சதீசன் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டு கொண்டார். 

அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவி ஏற்பு விழாவை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர உள்ளதால், பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த்ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். 

விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 16 மே, 2026

தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு - முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - முழு விபரம்

பதிவு: சனிக்கிழமை,  மே  16, 2026, வைகாசி, 02, பாரபவ வருடம் 05:30 PM

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். 

அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;-.

முதல்-அமைச்சர் விஜய் - பொது நிர்வாகத்துறை, உள்துறை, காவல் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல்.

அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை 

அமைச்சர் ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை 

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை 

அமைச்சர் செங்கோட்டையன் - நிதித்துறை

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் - மின்சாரம், மற்றும் நீதித்துறை 

அமைச்சர் கீர்த்தனா - தொழில்துறை

அமைச்சர் டி.கே.பிரபு - இயற்கை வளத்துறை 

அமைச்சர் ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை 

அமைச்சர் வெங்கராமன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் - 17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள்

பதிவு: சனிக்கிழமை,  மே  16, 2026, வைகாசி, 02, பாரபவ வருடம் 03:30 PM

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்து இருந்தார். 

அதன்படி, தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. 

தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று, த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் ஒரு இடத்தை எதிர்பார்ப்பதால் அதுகுறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. 

அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, அமைச்சரவை பட்டியலை தயாரிக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

17-வது சட்டசபையில் மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. 

அந்த வகையில், ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு அமைச்சரவையில் 26 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை முடிவு செய்யப்பட்ட பிறகு துறைகளும் ஒதுக்கப்படும். 

அதன்பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை  கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.  தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் ஆரம்பமாகும். 

கவர்னர் உரை நிகழ்த்தி முடித்ததுடன், அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். 

இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் உரை வழங்குவார். 

அதன்பின்னர், 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால், இந்த முறை ஒரே பட்ஜெட்டாக இருக்குமா, அல்லது வேளாண்மைக்கும் தனியாக தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு அதன் மீதான  விவாதம் நடைபெறும். 

தொடர்ந்து, நிதி அமைச்சர் பதில் உரை வழங்குவார். அதன்பிறகு, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். 

எப்படியும், 40 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்பதால், புதிய அரசு எப்படி செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகளையும் தாண்டி, பொதுமக்களிடமும் இருக்கிறது.

வெள்ளி, 15 மே, 2026

மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் - திட்டத்தை மறுசீரமைக்க முடிவு - புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டது

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே  15, 2026, வைகாசி, 01, பாரபவ வருடம் 02:30 AM

சென்னை,

தலைமைச் செயலகத்தில் தொழில், வர்த்தகத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சாய்குமார், துறை செயலர் அருண் ராய், டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி, சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அலர்மேல்மங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மே மாதத்​துக்​கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். இத்​திட்​டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்​ள​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் இடைநிற்​றல் இல்​லாமல் உயர்​கல்​வியைத் தொடர்​வதற்​காக புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்​டங்​கள் முந்​தைய திமுக ஆட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. 

அதன்​படி, புது​மைப்​பெண் திட்​டத்​தில் மாணவி​களுக்​கும், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தில் மாணவர்​களுக்​கும் மாதம்​தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாத​மும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்​கப்​பட்டு வந்​தது.

இந்த நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. முந்​தைய அரசுகளால் கொண்டு வரப்​பட்ட முக்​கிய மக்​கள் நலத் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் உறுதியளித்​தார். 

இதன் தொடர்ச்​சி​யாக, புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கிலும் நேற்று வரவு வைக்​கப்​பட்​டது. இதனால் மாணவர்​கள், பெற்​றோர் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இதற்​கிடையே, தமிழகம் முழு​வதும் 1.31 கோடி பெண்​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாதம் 15-ம் தேதி​யும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்​கப்​பட்டு வரு​கிறது. 

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில், 

‘மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்​படு​கிறது. நடப்பு மே மாதத்​துக்​கான உரிமைத் தொகை, பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதே​நேரம் முதல்​வரின் அறி​விப்பை திமுக தலை​வர் ஸ்டா​லின் விமர்​சனம் செய்​துள்​ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில், 

‘தி​முக அரசின் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் சொன்​னீர்​கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்​டும். ஏற்​கெனவே உள்ள திட்​டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்​யப் போகிறீர்​கள்? மாதம் ரூ.2,500 தரு​வ​தாக வாக்​குறுதி தந்​து​விட்​டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்​தடிப்​பது​தான் உங்​கள் மாற்​ற​மா?’ என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

முதல்​வர் ஆலோ​சனை

அரசின் நிதி​நிலை​யைப் பொருத்து நலத் ​திட்​டங்​களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்​டும். அரசின் நிதி​நிலை தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்​வ​ராக பதவி​யேற்ற விழா​விலேயே விஜய் தெரி​வித்​திருந்​தார்.

அந்த வகை​யில் தமிழக அரசின் நிதி​நிலை தொடர்​பாக துறை​சார்ந்த உயர் அதி​காரி​களு​டன் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

தலை​மைச் செயலர் ​சாய்​கு​மார், நிதித் துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் உள்​ளிட்ட அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். நடப்பு ஆண்​டுக்​கான பட்​ஜெட், புதிய திட்​டங்​களுக்​குத் தேவைப்​படும் நிதி ஒதுக்​கீடு, முந்​தைய திமுக ஆட்​சி​யில் நிதி​சார் செயல்​பாடு​கள் தொடர்​பான வெள்ளை அறிக்கை தயாரிப்பு உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இக்​கூட்​டத்​தில் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது. 

தொடர்ந்​து, தொழில் முதலீட்​டுக் கழகம் மற்​றும் வர்த்​தகத் துறை செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​ கூட்​ட​மும்​ நடை​பெற்​றது.

வியாழன், 14 மே, 2026

நம்பிக்கை தீர்மானத்துக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு - வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி - திமுக அணியினர் வெளிநடப்பு

பதிவு: வியாழக்கிழமை,  மே 14, 2026, சித்திரை, 31, பாரபவ வருடம் 02:55 AM

சென்னை, 

சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்ற பெரும்​பான்​மைக்​கான வாக்​கெடுப்​பில் 144 எம்​எல்​ஏக்​கள் ஆதர​வுடன் முதல்​வர் விஜய்​யின் தவெக அரசு வெற்றி பெற்​றது.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 108 தொகு​தி​களை கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்சியாக தவெக உரு​வெடுத்​துள்​ளது. எனினும், ஆட்சி அமைக்க மொத்​தம் 118 இடங்​கள் தேவைப்​பட்ட நிலை​யி்ல், காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளைச் சேர்ந்த 13 உறுப்​பினர்​களின் ஆதர​வைத் தவெக பெற்​றது. இதையடுத்து 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அர்​லேகர் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து, ஆளுநர் அறி​வுறுத்​தலின்​படி, சட்​டப்​பேர​வை​யில் விஜய்​யின் தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. பேர​வைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் கேட்​டுக்​கொண்​டபடி. நம்​பிக்கை வாக்​கெடுப்​புக்​கான தீர்​மானத்தை முதல்​வர் விஜய் முன்​மொழிந்​தார்.

தொடர்ந்​து, எஸ்​.​ராஜேஷ் கு​மார் (காங்​கிரஸ்), ஆர்​.செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்), வன்​னியரசு (விசிக), அ.மு.ஷாஜ​கான் (ஐயூஎம்​எல்), அமமுக​வில் இருந்து நீக்​கப்​பட்ட எஸ்​.​காம​ராஜ் (சுயேச்​சை), டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்) ஆகியோர் அரசுக்கு ஆதர​வாக பேசினர்.

பிரேமலதா விஜய​காந்த் (தே​மு​தி​க), தமி​முன் அன்​சாரி (மஜக), நித்​தி​யானந்​தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். போஜ​ராஜன் (பாஜக), சவுமியா அன்​புமணி (பாமக) ஆகியோர் நடுநிலை வகிப்​ப​தாக தெரி​வித்​தனர்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி, அதி​முக எம்​எல்​ஏக்​கள் 2 அணி​களாக செயல்​பட்டு வரு​வதை குறிப்​பிட்​டு, அரசுக்கு எதி​ராக வாக்​களிக்க உள்​ள​தாக தெரி​வித்​தார். இதையடுத்​து, அதி​முக​வின் சி.வி.சண்முகம் தரப்பில் எஸ்​.பி.வேலுமணி பேச வாய்ப்பு தரப்​பட்​டது. அதற்கு பழனி​சாமி உள்​ளிட்​டோர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். பேர​வைத் தலை​வர் அனு​மதி அளித்​ததை அடுத்​து, வேலுமணி அரசுக்கு ஆதரவு அளிப்​ப​தாக தெரி​வித்​தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், ‘பெரும்​பான்மை மக்​கள் தவெக​வுக்கு வாக்​களிக்​க​வில்​லை’ என்று பேசி​யதுடன், வாக்கெடுப்​பில் பங்​கேற்​காமல் வெளிநடப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். திமுகவுடன் தேமுதிக, மஜக, கொமதேக, மமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதல்​வர் விஜய் பேசும்​போது, ‘‘இந்த அரசு நிச்​ச​யம் மதச்​சார்​பற்ற அரசாகத்​தான் செயல்​படும். குதிரை பேரத்​தில் இந்த அரசு ஈடு​பட​வில்​லை. குதிரை வேகத்​தில் செயல்​படு​கிறது. தமிழகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு உழைத்த தலை​வர்​கள் வழி​காட்​டிய கொள்​கை​களில் இருந்து இம்​மியள​வும் வில​காமல் இந்த ஆட்சி நடை​பெறும். எனவே, நான் முன்​மொழிந்த தீர்​மானத்தை உறுப்​பினர்​கள் ஏகமன​தாக நிறைவேற்​றித் தரவேண்​டும்’’ என்​றார்.

இதையடுத்​து, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கச்​செய்​து, ஆதரிப்​பவர்​கள், எதிர்ப்​பவர்​கள், நடுநிலை வகிப்​பவர்​கள் என எண்​ணிக் கணிக்​கு​மாறு பேர​வைச் செயலர் கி.சீனி​வாசனுக்குப் பேரவைத் தலைவர் அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி, பிரிவு வாரி​யாக உறுப்​பினர்​கள் எண்​ணிக் கணிக்​கப்​பட்​டனர். உறுப்​பினர்​களை எழுந்து நிற்​கக்​கூறி, பெயர் வாசிக்​கப்​பட்டு அவர்​கள் நிலைப்​பாடு கணக்​கில் கொள்​ளப்​பட்​டது.

இதையடுத்​து, வாக்​கெடுப்பு விவரத்தை பேர​வைத் தலை​வர் அறி​வித்​தார். அதன்​படி, 144 உறுப்​பினர்​கள் அரசுக்கு ஆதர​வளிப்​ப​தாக​வும், 22 உறுப்​பினர்​கள் எதி​ராக வாக்​களித்​த​தாக​வும், 5 உறுப்​பினர்​கள் நடுநிலை வகித்​த​தாக​வும் அறி​வித்​தார். இதன்​மூலம் வாக்​கெடுப்​பில் தவெக அரசு பெரும்​பான்மை பெற்​றுள்​ள​தாக​வும் அறி​வித்​தார்​. இதையடுத்​து, அனைத்​து உறுப்​பினர்​களுக்​கும்​ முதல்​வர்​ விஜய்​ நன்​றி தெரிவித்​தார்​.
 

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...