செவ்வாய், 30 ஜூன், 2026
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - காலி தொகுதிகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 30, 2026, ஆனி 16, பாரபவ வருடம் 00.50 AM
சென்னை,
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர். உடன் பேரவைச் செயலர் ஆர்.சாந்தி.
கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் காலி தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.
சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 பேரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், அவர்களின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பழனிசாமியுடன் சமாதானமாகினர்.
இருப்பினும் அவர்கள் ஏற்கெனவே வகித்த கட்சிப் பதவிகள் திரும்ப வழங்கப்படவில்லை. இதற்கிடையே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து 6-வது எம்எல்ஏ: இந்நிலையில், கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரிடம் வழங்கினார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக பேரவைத் தலைவர் பிரபாகரும் உடனே அறிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘‘சட்டப்பேரவை விதி 21-ன் படி கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது பதவி விலகல் கடிதத்தை, தனது கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.
அந்த கடிதம் பேரவை விதி 22-ன்படிமுறையாக உள்ளதால் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக பழனிசாமி நியமித்தார்.
ஆனாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் தவெகவில் அவர் சேரஉள்ளதாகவும் கூறப்படுகிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா மூலம், சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
சென்னை,
“வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றத் தடுப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் அரசு சேவைகள் மக்களிடம் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்தல் வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள மாநாட்டுக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள் மாநாடு இன்று காலை முதல்வர் விஜய் தலைமையில் தொடங்கியது. அதில் அவர் பேசியது: “வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றே நம் மக்கள் முடிவு செய்துதான், நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.
மக்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு சான்றிதழ், பட்டா போன்ற அடிப்படைத் தேவைகளைக் கேட்டுதான் வருவார்கள். அப்படி வருகின்ற மக்களை, தங்கள் வீட்டில் இருக்கின்ற மனிதர்களாக நடத்தினால் போதும், அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மக்களுக்கு வங்கி சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்கள் கூட்டத்தை (Bankers Meeting) நடத்தி விசாரிக்க வேண்டும்.
மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் (Field Visit) செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு (Follow-up) மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.
மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த் துறை, காவல் துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்ப்படுகளை செய்தே ஆக வேண்டும்.
மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வி என்பது ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.
மேலும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துச் செயல்பட வேண்டும். ‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.
மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
வெளிப்படைத் தன்மை என்பது அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும். அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித் துறை கண்காணிக்க வேண்டும்.
கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுப்பணித் துறை (PWD), அறநிலையத் துறை, தீயணைப்பு - மீட்பு மற்றும் வருவாய்த் துறைகள் அனைத்து முக்கிய நிகழ்வுகளின்போதும் காவல்துறையுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான காயப்படுத்தல் வழக்குகள் மற்றும் கொலைகளுக்கு, நில தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரமைக்கப்பட்டு இருவார இடைவெளியில் கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் மதிப்பாய்வு நடத்தி அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகமான இடங்கள், விபத்துகள் அதிகமாக நிகழும் பாதைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகமாக வருகைதரும் இடங்கள் என கண்டறியப்பட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி நிறுவும் இயக்கத்தை முனைப்பாக நடத்த வேண்டும். இரண்டாம்நிலை நகரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் நகர்புற சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கவரேஜ் இடைவெளிகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் மாதாந்திர கூட்டங்களில் சிசிடிவி நிறுவல் தொடர்பான பணி முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு ஒவ்வொரு மாதாந்திர மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிலையான மற்றும் சமரசமற்ற நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும். முக்கிய இடங்கள் கண்காணிப்பு, சிசிடிவி கவரேஜ் ஆகியவற்றின் முன்னேற்றம் ஒவ்வொரு கூட்டத்திலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
அதேபோல் CoP/IGP/DIG/SP ஆகியோர் ஆய்வின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல், விசாரணையின் தரம், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சார்ந்தோருக்கான இழப்பீடு மற்றும் நிலுவையிலுள்ள விசாரணை வழக்குகளின் நிலை ஆகியவற்றையும் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித் துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும். சிறார் நீதி (JJ) சட்ட விதிகளை திறம்படப் பயன்படுத்த வேண்டும்.
கள்ளச் சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் (Illicit distillation) இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். சமூக அளவிலான தடுப்புக்கு உள்ளாட்சி அமைப்புகளைத் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் (Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும். சுகாதாரத் துறை அனைத்து மாவட்டங்களிலும் போதைமுறிவு முகாம்களை நடத்த வேண்டும். பழக்கத்திற்கு உள்ளாக்கும் போதை மருந்துகளாக சில மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்து ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அனைவரும் போதை ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். NCORD கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும்.
திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்.
காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய, சமூகங்களை ஏமாற்றும் PONZI மற்றும் பலமட்ட சந்தைப்படுத்தல் திட்டங்கள் தொடர்கின்றன.
சட்டங்களைக் கண்டிப்பாக அமல்படுத்துவதன் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்த, தொடர்புடைய அனைத்து துறைகளும் திறம்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும். உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது.
புயலால் பாதிக்கப்படும் கடலோர மாவட்டங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்கள், நீலகிரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப்பகுதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார்நிலை பற்றி கட்டமைக்கப்பட்ட தணிக்கை நடத்தப்பட வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பருவமழை காலத்திற்கு முன் மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உரிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்களை குறிவைத்து டிஜிட்டல் கைது மோசடி, ஓடிபி மோசடி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி அதிகரித்துள்ளன. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து சைபர் குற்ற காவல் நிலையங்களும், குற்றங்களைத் தடுக்க மற்றும் கண்டறிய தீவிரமாக பணியாற்றிட வேண்டும்.
காவல் துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும்; இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தெளிவும், வெளிப்படைத் தன்மையும் இருக்க வேண்டும்” என்று முதல்வர் விஜய் கூறினார்.
திங்கள், 29 ஜூன், 2026
50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்
சென்னை,
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 50 லட்சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதன்பிறகு, போலியோ பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட மொத்தம் 43,051 மையங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியும், அவர்களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்மைகளை பரிசாக கொடுத்தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் சோமசுந்தரம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். அழுது அடம்பிடித்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியும், சாக்லேட், பொம்மைகள் வழங்கியும் மருந்து வழங்கப்பட்டது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொலைதூரம் மற்றும் எளிதில் வந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு நடமாடும் குழுவினர் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
பிற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளை அடையாளம் காண, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் 5 வயதுக்கு உட்பட்ட 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பணியில் 6,564 பேர் ஈடுபட்டனர்.
சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியர்கள் வீடு வீடாக வந்து சொட்டு மருந்து வழங்குவார்கள். இன்றும், நாளையும் தற்காலிக மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.டி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி - பின்னணி குறித்து விசாரணை தீவிரம்
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 29, 2026, ஆனி 15, பாரபவ வருடம் 03.00 AM
சென்னை,
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி விவகாரத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை, தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் திட்ட அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னை, சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வந்த சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியைச் சேர்ந்த பி.டி அரசகுமார் (59) என்பவர் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்வு, திட்ட அனுமதி உள்பட பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு,உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றி உள்ளார்.
எனவே, பி.டி அரசகுமார் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, புகாருக்குள்ளான திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இவரது பின்னணியில் முன்னாள் எம்எல்ஏ ஒருவரும், மேலும் சிலரும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த மோசடியின் பின்னணியில் வேறு யார்? யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பெயர் பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 28 ஜூன், 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் - 2 மதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக மறுப்பு: வைகோ அதிர்ச்சி
சென்னை,
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்நிலையில், மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய மறுத்துள்ளதால் வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., பொருளாளர் செந்திலதிபன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, பூமிநாதன், ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 எம்எல்ஏக்கள் செந்தில் செல்வன், தி.மு.ராஜேந்திரன் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை.
பொதுக்குழுவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்து, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கருத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தினர். அவர்களது விருப்பத்துக்கு இணங்க, கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் ஊடுருவக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே, கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உறுதியாக நீடித்தோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்றதாக பரவலாக செய்திகள் வெளிவந்தன. பரஸ்பரம் எதிர் துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் இப்படி ஒரு ரகசிய உடன்படிக்கையை மேற்கொண்டது உண்மையாக இருக்குமானால், அதைவிட பெரிய அரசியல் மோசடி வேறு இருக்க முடியாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தோம்.
மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் ஏற்கெனவே திமுகவில் இணைந்துவிட்டார். கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும், மதிமுகவிலேயே தொடர்வதாக உறுதி அளித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைப் பொதுச் செயலாளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாகவும், சென்னை ஓஎம்ஆர், அண்ணா சாலையில் பிரம்மாண்ட கட்டிடங்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படும் புகார்கள் முற்றிலும் பொய்யானவை.
இந்த பழிச்சொற்களுக்குப் பின்னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்குகின்றனர். எனவே, இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மற்றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நாங்கள், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. தவெக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் இருமொழிக் கொள்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தவெக அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன.
எங்கள் கட்சி எம்எல்ஏவை திமுக தன் பக்கம் இழுத்திருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்வதா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்வதா எனத் தெரியவில்லை. மேலும், எங்களது 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என விஜய் கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், தலைவர் வைகோ மீதோ, எம்எல்ஏவான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை தலைமை இப்போது மேற்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம். கூட்டணி குறித்து தாங்களும், கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். எனவே, பதவி விலகல் தொடர்பாக வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, என்னால் செயல்படுத்த இயலாது. அதனால், பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2026, ஆனி 14, பாரபவ வருடம் 05.00 AM
சென்னை,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகளால் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், ப.சிதம்பரத்தை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வந்து, தேசியத் தலைமையை 28 இடங்களுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார் செல்வப்பெருந்தகை. இதுதவிர, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்ததாக தமிழக மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஹசீனா சையத் கிளப்பிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையிலேயே, செல்வப்பெருந்தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்தது.
மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியின் முழு ஆதரவுடன் மாநிலத் தலைவர் பதவியை மாணிக்கம் தாகூர் கைப்பற்றியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சிவகங்கையில் பிறந்த மாணிக்கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் (என்எஸ்யூஐ) இணைந்தார். கடந்த 2009, 2019, 2024 மக்களவை பொதுத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். 2014 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியடைந்தார். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும், பிற மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்தே திமுகவை இவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
சென்னை,
‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
இயக்குநர் கே.பாக்யராஜ் 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய
அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், சார்லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன். சந்தானபாரதி, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் திரைப்படக் காட்சிகள், பிரபல வசனங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசை அமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனித நேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும்; காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரைஉலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.
இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார். யதார்த்தமான நடிகர், இயக்குநர் என்று அறியப்பட்டவர் கே.பாக்யராஜ். அது மட்டுமின்றி, தனது தனிச் சிறப்பான பாணியால் எதிர்பாராத, அதேநேரம் ரசிக்கக்கூடிய திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை அமைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர்.
அவர் இயக்கிய படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றன. அதனால், இந்திய அளவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று கொண்டாடப்பட்டார். முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு, பாக்யராஜ் உடல் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
இயக்குநர் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமானார். தனது குருவான பாரதிராஜா மறைந்த 17-வது நாளில் பாக்யராஜ் மறைந்தது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனி, 27 ஜூன், 2026
போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் - அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 15,000 பேர் பங்கேற்பு
சென்னை,
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளும் மாரத்தானில் கலந்துகொண்டனர்.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற கருத்துடன் நேற்று மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முதல்வர் விஜய், விழிப்புணர்வுப் பலகையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்திட்டார். அவரது தலைமையில் அனைவரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன்பிறகு, மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இருந்து தீவுத்திடல் வரை மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.
முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 கி.மீ. தூரம் நடைபெற்ற ஓட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இவர்களுடன் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், மரியவில்சன், ரா.குமார், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், விளையாட்டுத் துறை செயலர் சந்தீப்நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாநகராட்சி ஆணையர் சமீரன், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்டோரும் மாரத்தானில் பங்கேற்று ஓடினர். பின்னர், வீரர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியின் முடிவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழக வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் மாரத்தான் ஓடியது இல்லை. முதல்வர் விஜய்தான் முதல்முறையாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்தான் ஓடியுள்ளார். அவரைப் போலவே தமிழகமும் ஆரோக்கியமாக மாறும்” என்றார்.முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடும் சட்ட நடவடிக்கை கள் மூலமாகவும் போதைப் பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணைநின்று, போதைப் பொருள் இல்லாத, பாதுகாப்பான, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 26 ஜூன், 2026
“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” - முதல்வர் விஜய்யின் ‘அப்பாவைக் காணோம்’ குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM
திருவாரூர்,
தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
பின்னர் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க முடியவில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.
ஆனால் முதல்வராக உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “எங்கே உங்கள் அப்பாவை காணோம்!” என்கிறார். அப்பாவை அங்கே தேடாதீர்கள். அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன்.
கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத் தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது, சென்றிருக்கிறேன். நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப் போல யாரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்.
மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்துள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் கூட்டணி கட்சியை பாதுகாப்பாக வைத்திருப்பார், அவர்களாகத்தான் கூட்டணியை விட்டு போவார்களே தவிர, வெளியேற்ற மாட்டார்.
அந்த வழியில்தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்,” என்றார்.
இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வியாழன், 25 ஜூன், 2026
அன்புமணியை கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... பாமகவில் முடிவுக்கு வரும் குடும்ப யுத்தம்! - மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி
தைலாபுரம்,
தனது திருமண நாளில் மகன் அன்புமணியைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதன்மூலம், பாமகவில் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. ‘இனி நல்லது நடக்கும்’ என அன்புமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் பாமக தலைவர் அன்புமணி.
இதற்கு பாலமாக இருந்தவர் அவருடைய மனைவியான தருமபுரி எம்எல்ஏ சவுமியா. இதனால், தந்தை - மகன் இடையே விரிசல் ஏற்பட்டது.
2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை நியமித்துள்ளதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேஜை மீது மைக்கை தூக்கி வீசி எதிர்வினையாற்றினார் அன்புமணி. இதனால் கோபடைந்த ராமதாஸ், என்னுடைய முடிவை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லையென்றால் செல்லலாம் என்றார். பனையூரில் கட்சி அலுவலகம் செயல்படும், என்னை அங்கு வந்து கட்சி நிர்வாகிகள் சந்திக்கலாம் என ராமதாஸுக்கு அன்புமணி பதிலடி கொடுத்தார்.
மாமல்லபுரத்தில் 2025 சித்திரை மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் அன்புமணியை புகழாமல், மாநாட்டுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்ததாக கூறி, திருக்கச்சூர் ஆறுமுகத்தை ராமதாஸ் பாராட்டினார். இதனால் தந்தை - மகன் இடையே விரிசல் அதிகரித்தது.
தைலாபுரத்தில் கடந்த 2025 மே 16-ம் தேதி ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் புறக்கணித்தனர். அவர்களை வர விடாமல் அன்புமணி தடுத்துவிட்டார் என்றார் ராமதாஸ். மேலும் அவர், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியின் பதவியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமித்தார்.
தலைமை பண்பு இல்லாதவர், கோபக்காரர், தாய் மீது பாட்டிலை தூக்கி வீசினார், நிர்வாக திறன் இல்லதாவர், மத்திய அமைச்சராக்கியது நான் செய்த பெரிய தவறு, பாஜகவுடன் கூட்டணிக்காக கணவனும், மனைவியும் எனது இரு கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர், பாமக தலைவர் என்ற பதவிக்கு மூடி சூட நாள் குறித்து மருமகள் சவுமியா நெருக்கடி கொடுத்தார் என மிக கடுமையாக மகன் மற்றும் மருமகளை ராமதாஸ் விமர்ச்சித்தார்.
மேலும், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டேன், என்னுடைய பெயரை அன்புமணி இணைந்து போடக் கூடாது, வேண்டுமென்றால் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தது பாமக தொண்டர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைக்க, தன்னிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பை பொருட்படுத்தாமல், அன்புமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தார் பழனிசாமி.
பாமக எனும் கட்சி, கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது. இது ராமதாஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நீதிமன்ற கதவுகளை தட்டியும் சாதகமான அரசியல் சூழல் ராமதாஸுக்கு ஏற்படவில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியும் கைகூடவில்லை. தந்தை, மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். இதனால் வேறு வழியின்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் கூட்டணி அமைத்து சுமார் 40 தொகுதிகளில் களம் கண்ட ராமதாஸ், அனைத்திலும் டெபாசிட் இழந்தார். பல தொகுதிகளில் 4 இலக்க எண்களில் வாக்கு கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் கிளசரின் போட்டுக் கொண்டு பேத்திகள் அழுவதாகவும், தருமபுரி அதர்மபுரியாக மாறிவிடும் என ராமதாஸின் மிக கடுமையான விமர்சனத்தையும் மீறி சவுமியா அன்புமணி உட்பட 4 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்கு பிறகு அன்புமணியின் கை ஓங்கியது. தைலாபுரத்துக்கு வருவதை பாமகவினர் குறைத்துக் கொண்டனர். யாரையும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளை கூறி, சில அறிக்கைகளை மட்டும் ராமதாஸ் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில் தந்தை - மகனை மீண்டும் ஒருங்கிணைக்க குடும்ப உறவுகளும், முக்கிய நபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக ராமதாஸின் திருமண நாள் சரியானதாக இருக்கும் என நாள் குறிக்கப்பட்டது.
அதன்பேரில் ராமதாஸ் - சரஸ்வதி இணையரின் 61-வது திருமண நாளை ஒட்டி, அவர்களிடம் ஆசி பெற தைலாபுரத்துக்கு மனைவி சவுமியா, மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா, இரு மருமகன்கள், பேர பிள்ளைகள் சகிதம் அன்புமணி இன்று (ஜூன் 24) வருகை தந்தார். ஆரத்தி எடுத்து ராமதாஸ் தரப்பினர் வரவேற்றனர்.
மேலும் பேர பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேர பிள்ளைகளையும் ராமதாஸ் - சரஸ்வதி கொஞ்சி மகிழ்ந்தனர். அப்போது அவர்களது கால்களில் விழுந்து அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனைவரும் ஆசி பெற்றனர். ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “அப்பா - அம்மாவின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்துடன் சென்று வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டோம். இனி, நல்லது நடக்கும்” என்றார். ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது பாமகவினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.
மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி
பாமக நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை குடும்பத்துடன் வந்து அன்புமணி சந்தித்தபோது, அவரது இளைய சகோதரி கவிதா உடன் இருந்துள்ளார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, அவரது மகன் முகுந்தன் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர்.
தலைவர் பதவியை தன் வசப்படுத்திக் கொண்டதாக அறிவித்த ராமதாஸ், மகனை செயல் தலைவர் பதவியில் இருக்கலாம் என்றார். இதனை அன்புமணி ஏற்கவில்லை. இதனால் மகனுக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவியை பறித்து, மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு ராமதாஸ் வழங்கினார்.
தந்தை - மகன் ஒன்றாக இணைந்தாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்கிறது. பாமக செயல் தலைவர் பதவியில் ஸ்ரீகாந்தி இருப்பதால், கட்சியிலும் புகைச்சல் தொடரும் என்பதுதான் நிதர்சனம்.
புதன், 24 ஜூன், 2026
தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் - மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று பேசிய முதல்வர் விஜய்.
‘‘நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம். எனவே, மத்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதலை விரும்பவில்லை’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்து முதல்வர் விஜய் பேசியதாவது:
நமது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள், சிலரின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மின்வெட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.
விரைவில் இந்த மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும். சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போல், பெண்கள் பாதிக்கப்படுவதையும் இங்கு யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.
அதற்கான கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அதேபோல், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நம் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.
இவை எல்லாம் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினைகள். கடந்த 10 மாதங்களாக நமது மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்ததற்கு எல்லாம் நமது ஆட்சியில்தான் விடையே கண்டுபிடித்து இருக்கிறோம்.
போதைப் பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவியுள்ளது. இவற்றை எல்லாம் ஆரம்பக் கட்டத்திலேயே யார் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அப்போது காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருந்தது. காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே போதைப் பொருள் நடமாட்டத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை? நம்முடன் சேர்த்து மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள்.
மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டதும், குடும்பம் குடும்பமாக மக்கள் ஆதரவு தெரிவித்ததும் தவறு என்கிறார்கள். இது இப்போது இல்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது. எம்ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்போதும் மக்களைத் தவறாகப் பேசியிருக்கிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக ஒரே ‘டெக்னிக்'. தொழில்நுட்பம் எல்லாம் மாறி வேறு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. கொஞ்சம் டெக்னிக்கையாவது மாற்ற வேண்டும். மக்களுக்கு பயனுள்ள ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் சொல்லலாம்.
5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது. பேசு பேசு என்றால் அப்புறம் நான் என்ன செய்வது? ஆளுநர் உரையன்று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. மரபையே மாற்றி விட்டீர்கள் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள்.
அது ஞாபகம் இருக்கிறதா? தேசிய கீதத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பும், அதே நிகழ்ச்சியில் 2 முறையும் பாடப்பட்டது நினைவில் இருக்கிறதா? இதை கேட்டால் அது குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று சொல்வார்கள்.
நமது அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாதுதான். எங்கள் எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவுக்கு, மக்கள் பணத்தை சுருட்ட தெரியாதுதான்.
உங்களைப் போல் முறைகேடுகள் செய்வதை நாங்கள் தெரிந்து கொள்ள போவதில்லை. நமது அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குப் பக்க பலமாகவும், உறுதுணையாகவும் நிற்கும். நாம் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்டவர்கள்தான்.
தற்போதைய மத்திய அரசு சார்ந்த கட்சியின் அரசியலில் கொள்கை அளவில் நேர் எதிராக நிற்கிறோம். அதே நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்புபவர்கள் அல்ல. நமக்கு எப்போதும் தமிழக வளர்ச்சி மட்டும்தான் முக்கியம்.
அதற்காக நம்முடைய அரசியல் ரீதியான கொள்கைகளையோ, மாநில உரிமைகளையோ கொஞ்சமும் விட்டு தரமாட்டோம். எனவே, நம் மக்களுக்கோ, சிறுபான்மை சகோதர்களுக்கோ, ஆதரவு இயக்கங்களுக்கோ எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
நாம் யாருடைய அணியும் இல்லை. மாநில உரிமையில் எப்போதும் உறுதியாக இருப்போம். அரசியல் வேறு, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் தெளிவாக இருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
செவ்வாய், 23 ஜூன், 2026
தமிழக சட்டசபை முட்டுக்காடுக்கு மாறுகிறதா? பரபரப்பு தகவல்
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் (2006-11) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சட்டசபை கட்டிடத்தை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியாக மாற்றினார்.
தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் சட்டசபை செயல்பட்டு வருகிறது.
கோட்டை வளாகத்தின் நெரிசலைக் குறைக்கவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித போக்குவரத்துப் பாதிப்பும் இன்றி எளிதாக வந்து செல்லவும் சட்டசபையை முட்டுக்காட்டில் கட்டப்படும் வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.535 கோடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மையத்தில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய மாபெரும் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள், 22 ஜூன், 2026
முதல்-அமைச்சராக ‘முதல்’ பிறந்தநாளை கொண்டாடும் ஜோசப் விஜய்... இன்று புதிய அறிவிப்பு வெளியாகிறது?
சென்னை,
'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி, தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கி உள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் பிறந்தநாளை இன்று (ஜூன் 22ம் தேதி) கொண்டாடுகிறார் விஜய். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்போதே அவரது கட்சியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
தமிழக வெற்றிக்கழகம்தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி ஒற்றை அறிக்கை மூலம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டினார்.
'விசில்' சத்தம்
விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2-வது மாநாட்டையும் நடத்தி தமிழக அரசியலை அதிர செய்தார். லட்சக்கணக்கான மக்கள் கூடிய அந்த மாநாடுகளை இந்தியாவே உற்று நோக்கியது.
அரசியலில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்த விஜய், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அம்பேத்கர், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலையம்மாளை கொள்கை தலைவர்களாக அறிவித்தார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே சட்டசபை பொதுதேர்தலை த.வெ.க. எதிர்கொண்டது.
விசில் சின்னத்துடன் கூட்டணியின்றி மக்களை சந்தித்த விஜய், 'உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டு வந்திருக்கிறேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசாரம் மக்கள் மனதை தொட்டது. அவர் பிரசாரத்திற்கு சென்ற, செல்லாத இடங்களிலும் 'விசில்' சத்தம் தெறிக்க விட்டது.
முதல்-அமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்திரையில் மட்டுமல்ல. தேர்தலிலும் விஜய் 'சர்க்கார்' அமைய மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.
'உச்ச நடிகர்' என்ற அடையாளத்தை தாண்டி தமிழக முதல்-அமைச்சர் விஜய் என்று வரலாறு உச்சரிக்க தொடங்கியது.
மே 10-ந்தேதி ஆட்சி பொறுப்பேற்று, ஒரு மாதத்தை நிறைவு செய்து இருக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கு இன்று (திங்கட்கிழமை) 52-வது பிறந்தநாள்.
இதுவரை, நடிகராக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் முதல்-அமைச்சராக தனது 'முதல்' பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இது அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் நாளை அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள்.
இன்று புதிய அறிவிப்புமுதல்-அமைச்சராக பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், நல உதவிகள் வழங்க த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ தொழிற்சாலையில் பரிதாபம் - அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் பலி - கவலைக்கிடமான நிலையில் பலருக்கு தீவிர சிகிச்சை
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 2 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வருகின்றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்துள்ளது. சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் வாயு பரவியதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பெண்கள், 5 ஆண்கள் எனமொத்தம் 65 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு வாய், மூக்கு, கண், காதுகளில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. பெரியபாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனை களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 பேரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19) என்ற இளம்பெண்ணும், செங்குன்றம் அருகே உள்ள சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரில் ஒடிசாவைச் சேர்ந்த மாலோதி (20) என்ற இளம்பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
பெரிதும் பாதிப்புக்கு உள்ளான 7 தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாகஇருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், குமார் மற்றும் எம்எல்ஏக்கள் விஜயகுமார், ரவி, அருண்குமார் ஆகியோரும் மருத்துவமனைகளுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் ஆகியோர் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினர்.
இதற்கிடையே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் குழுவினர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றிய தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
3 பேர் கைது
அமோனியா வாயு கசிவு தொடர்பாக பெரியபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன், மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொழிற்சாலை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமோனியா கசிவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர், ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் அர்லேகர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவி்த்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,
‘திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்
விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதும், பல தொழிலாளர்கள் காயமடைந்ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மேலும், சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைவில் குணமடைந்து முழு உடல்நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்த வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
நச்சு வாயுவை சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
கடந்த சில காலங்களாகவே தொழில் நடக்கும் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்வதும் அதனால் உயிர்பலிகள் உண்டாவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஞாயிறு, 21 ஜூன், 2026
தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்
சென்னை,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். இதையொட்டி, பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. விண்ணப்பித்திருந்த 22.80 லட்சம் பேரில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
வினாத்தாள் கசிந்தது
இதற்கிடையே, நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப் பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீட் மறுதேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் உட்பட 14 நாடுகள் என சுமார் 5,500 மையங்களில்நடைபெறும் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 307 தேர்வு மையங்களில் 1.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கெனவே வினாத்தாள் கசிந்துள்ளதால், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்கள் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வினாத்தாள்களை கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
தேர்வு மையங்களில் சிசிடிவி: அதேபோல, அனைத்து நீட் தேர்வு மையங்களையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை கண்காணிக்க ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நீட் மறுதேர்வு பணிகளில் 2 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
வழக்கமாக, நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். நிர்வாக நடைமுறைகளால் மாணவர்களின் தேர்வு நேரம் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த முறை கூடுதலாக 15 நிமிடங்கள் தேர்வு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு மாணவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட உள்ளனர். ஆள்மாறாட்ட மோசடியைத் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சோதனையும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகள், மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட், அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் அணிந்து வரவும், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 மொழிகளில் தேர்வு
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
சனி, 20 ஜூன், 2026
மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது - சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
சென்னை,
சட்டப்பேரவையில் நேற்று மேகேதாட்டு அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகேதாட்டு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்.5-ம் தேதி அளித்த இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்.16-ம் தேதி அளித்த தீர்ப்பு ஆகியவற்றை மதிக்காமல், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதலையும், மத்திய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை ஏற்க முடியாது. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியையும் மத்திய அரசு அளிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப் படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.
இந்த விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. எனவே, மேகேதாட்டுவிலோ, காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றியும், மத்திய அரசின் அனுமதியின்றியும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகாவை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ, அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்கீழ் புதிய நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசியதாவது:
அரசியல் கட்சிகளுக்குள் கொள்கை, நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்களுக்கான பிரச்சினை என்றால், எல்லா கட்சிகளுமே மக்கள் பக்கம்தான் நிற்கும். நமது விவசாயிகள், மக்களுக்காக நிற்க வேண்டியது நமது கடமை. நதிநீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
அந்த உணர்வு அடிப்படையில், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் யாரையும் குறை சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நமது விவசாயிகள், தமிழக மக்களுக்காக கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தை ஒருமித்த கருத்துடன் அனைவரும் நிறைவேற்றித் தரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேமுதிக, கொமதேக, மதிமுக, மமக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உதயநிதியின் கோரிக்கை ஏற்பு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘மேகேதாட்டு அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் என்பதால், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்படி, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது எனும் திருத்தத்தை சேர்க்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு முதல்வர் விஜய், ‘‘மேகேதாட்டு பிரச்சினை குறித்து எனது தலைமையில் கடந்த மே 26-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனி நடுவர் மன்றம் அமைக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் அளித்த கருத்தை தனித் தீர்மானத்தில் கூடுதலாக சேர்க்கலாம்’’ என்றார். அதன்பிறகு, முதல்வர் முன்மொழிந்த திருத்தப்பட்ட தீர்மானம், பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்
முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, கண்ணன், ஆறுமுகம், சுவாமிநாதன், நாஞ்சில் முருகேசன் ஆகியோரது மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலர் சி.கு.ராமசாமி, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் பிரபாகர் வாசித்து முடித்ததும், அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
வியாழன், 18 ஜூன், 2026
“விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவுக்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்..” - கவர்னர் அர்லேகர்
சென்னை,
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி, கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், 17-வது சட்டசபையில் உரையாற்றுவதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காரில் புறப்பட்டார்.
வரவேற்பு
காலை 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த கவர்னர் அர்லேகருக்கு, பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் கவர்னரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சட்டசபை கூட்டம் தொடங்கியதுதொடர்ந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்தபடி, கவர்னர் அர்லேகர் சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு வருகை தந்தார்.
அவருடன் கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவான் உடன் வந்தார். சரியாக, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் அர்லேகர் வந்தார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும், இடதுபுறம் உள்ள இருக்கைக்கு கவர்னரின் செயலாளர் சஜன்சிங் சவானும் வந்தனர். .
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து
முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் தெரிவித்து, தனது உரையை கவர்னர் அர்லேகர் தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விசில் புரட்சி
தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்.
பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய்.
சிங்கப்பெண் அதிரடிப்படைமாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, நலன், சமூகநீதி, சமவாய்ப்பு ஆகியவை தவெக அரசின் அடிப்படை கொள்கைகள் ஆகும். இதனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும்.
போதைப் பொருளைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு படை அமைக்கப்படும்.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ ரெயில்
தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன்.
இரு மொழிக் கொள்கை
தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். பின்பற்றும். இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.
கடன் சுமைகடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி, ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது. இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது.
ஒலிம்பிக் மையங்கள்மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை தவெக அரசு மேற்கொள்ள உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்.
கோவில் நிதி கோவில்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படும்..மேகதாது அணைகர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். மேகதாது விவகாரத்தில் அரசின் சட்ட நடவடிக்கை தொடரும்.
மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை விரைந்து விடுவிக்க வேண்டும்.
சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதிப் பகிர்வு
மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்.
சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும்.
சென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளைசென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.
முதலீடுகளை ஈர்க்க முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்க AI பயன்படுத்தப்படும். கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை. உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இவ்வாறு கவர்னர் அர்லேகர் கூறினார்.
தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்
சென்னை,
சட்டசபை கூட்டம் தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது.
புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.
சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும்.
இதற்காக அவருக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
கவர்னர் உரைபேரவை மண்டபத்தில் கூடவுள்ள கூட்டத்தில், கவர்னர் அர்லேகர் பங்கேற்று, உரையாற்றுவார்.
புதிய அரசின் திட்டங்கள், நோக்கங்கள் அந்த உரையில் இடம் பெறும்.
இன்று காலை 9.50 மணிக்கு சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்படும்.
சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்பார்கள்.
தொடர்ந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வரும் கவர்னர், கூட்டத்தில் பங்கேற்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபையின் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.
புதிய அறிவிப்புகள்
இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப் படும்.
மேலும் இந்த கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சிகள் திட்டம்அதே நேரம் தமிழகத்தில் தற்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளன.
இதனால் கேள்வி நேரத்தில் அனல் பறக்கும் கேள்விகள், அதற்கு அரசு சார்பில் அளிக்கப்படும் அதிரடி பதில்கள் என இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...
-
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM திருவாரூர், தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ க...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...























