ஞாயிறு, 10 மே, 2026

தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்... ‘ஜோசப் விஜய் சந்திரசேகரன் எனும் நான்...’

பதிவு: ஞாயிற்றுக்கிழமை,  மே 10, 2026, சித்திரை, 27, பாரபவ வருடம் 05:30 AM

சென்னை,

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது.  

இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன.  இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.  

தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது.  எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.  இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது.  இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன. 

தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது.  இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.  எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன.  இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும்.  இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.

இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.  

அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.  அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.  அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். 

அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். 

இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை,  ஜூன்  13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM சென்னை, நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்​டூர் அணை திறக்​கப்​ப​டாத நில...