வெள்ளி, 1 மே, 2026

பத்திரிக்கையாளர், யு டியூபர் வாராகி மீதான குண்டாஸ் ரத்து - ரூபாய் 50 ஆயிரம் வழங்க உத்தரவு

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 03:10 AM

சென்னை,

'யு டியூபர்' வாராகி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்றம், 'தேவையின்றி கைது செய்து, சிறையில் அடைத்ததால், வாராகிக்கு, காவல் துறை 50,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், ஆபாசமாக திட்டியதாக, அமீனால் பீவி என்பவர் அளித்த புகார் அடிப்படையில், 'யு டியூபர்' வாராகிக்கு எதிராக, பெண்ணை அவமானப்படுத்துதல், ஆபாசமாக செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாராகியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், கடந்த ஆண்டு டிச.,3 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வாராகி மனைவி நீலிமா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் அருண் அன்புமணி, பி.ராஜ்குமார் ஆகியோர் ஆஜராகி, 'சட்டவிரோத நடவடிக்கைக்கு, மனுதாரரின் கணவர் உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

குற்றச்சாட்டுகள் முற்றிலும் நியாயமற்றவை. கைதுக்கான காரணம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை. எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.காவல்துறை தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் முனியப்பராஜ், மனுதாரர் தரப்பு வாதத்தை முற்றிலும் மறுத்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

மனுதாரரின் கணவர், இந்த வழக்கில் குற்றம் இழைக்கப்பட்டதாக கூறப்படும் நேரத்தில், புகார்தாரர் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரரின் கணவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

தேவையின்றி கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்பதில், நீதிமன்றத்துக்கு எவ்வித ஐயமும் இல்லை. எனவே, அவருக்கு காவல் துறை, 50,000 ரூபாய் வழங்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...