ஞாயிறு, 28 ஜூன், 2026
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் - செல்வப்பெருந்தகை மாற்றம்
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2026, ஆனி 14, பாரபவ வருடம் 05.00 AM
சென்னை,
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகளால் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர், எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 35 தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி விரும்பினார். ஆனால், ப.சிதம்பரத்தை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டு வந்து, தேசியத் தலைமையை 28 இடங்களுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார் செல்வப்பெருந்தகை. இதுதவிர, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்ததாக தமிழக மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஹசீனா சையத் கிளப்பிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையிலேயே, செல்வப்பெருந்தகையை மாற்ற டெல்லி தலைமை முடிவு எடுத்தது.
மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியின் முழு ஆதரவுடன் மாநிலத் தலைவர் பதவியை மாணிக்கம் தாகூர் கைப்பற்றியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சிவகங்கையில் பிறந்த மாணிக்கம் தாகூர் (51), இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் (என்எஸ்யூஐ) இணைந்தார். கடந்த 2009, 2019, 2024 மக்களவை பொதுத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். 2014 பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியடைந்தார். கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும், பிற மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இருந்தே திமுகவை இவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘திரைக்கதை மன்னன்’ - கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
சென்னை,
‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார் - முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினி, கமல் அஞ்சலி
பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் நேற்று காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
இயக்குநர் கே.பாக்யராஜ் 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய
அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், சார்லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன். சந்தானபாரதி, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாக்யராஜின் திரைப்படக் காட்சிகள், பிரபல வசனங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது நினைவுகளை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசை அமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கே.பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனித நேயம் மற்றும் சமூக விழுமியங்களைப் பேசும்; காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரைஉலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.
இறுதிச் சடங்கில் அரசு மரியாதை: திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார். யதார்த்தமான நடிகர், இயக்குநர் என்று அறியப்பட்டவர் கே.பாக்யராஜ். அது மட்டுமின்றி, தனது தனிச் சிறப்பான பாணியால் எதிர்பாராத, அதேநேரம் ரசிக்கக்கூடிய திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை அமைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர்.
அவர் இயக்கிய படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றன. அதனால், இந்திய அளவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று கொண்டாடப்பட்டார். முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு, பாக்யராஜ் உடல் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
இயக்குநர் பாரதிராஜா கடந்த 10-ம் தேதி காலமானார். தனது குருவான பாரதிராஜா மறைந்த 17-வது நாளில் பாக்யராஜ் மறைந்தது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனி, 27 ஜூன், 2026
போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் - அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 15,000 பேர் பங்கேற்பு
சென்னை,
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளும் மாரத்தானில் கலந்துகொண்டனர்.
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற கருத்துடன் நேற்று மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த முதல்வர் விஜய், விழிப்புணர்வுப் பலகையில் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்திட்டார். அவரது தலைமையில் அனைவரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன்பிறகு, மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இருந்து தீவுத்திடல் வரை மாரத்தான் ஓட்டம் தொடங்கியது.
முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 கி.மீ. தூரம் நடைபெற்ற ஓட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இவர்களுடன் முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், மரியவில்சன், ரா.குமார், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், விளையாட்டுத் துறை செயலர் சந்தீப்நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாநகராட்சி ஆணையர் சமீரன், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் உள்ளிட்டோரும் மாரத்தானில் பங்கேற்று ஓடினர். பின்னர், வீரர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியின் முடிவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழக வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் மாரத்தான் ஓடியது இல்லை. முதல்வர் விஜய்தான் முதல்முறையாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்தான் ஓடியுள்ளார். அவரைப் போலவே தமிழகமும் ஆரோக்கியமாக மாறும்” என்றார்.முதல்வர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடும் சட்ட நடவடிக்கை கள் மூலமாகவும் போதைப் பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணைநின்று, போதைப் பொருள் இல்லாத, பாதுகாப்பான, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 26 ஜூன், 2026
“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” - முதல்வர் விஜய்யின் ‘அப்பாவைக் காணோம்’ குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM
திருவாரூர்,
தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்; நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
பின்னர் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க முடியவில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.
ஆனால் முதல்வராக உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “எங்கே உங்கள் அப்பாவை காணோம்!” என்கிறார். அப்பாவை அங்கே தேடாதீர்கள். அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன்.
கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத் தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது, சென்றிருக்கிறேன். நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப் போல யாரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்.
மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்துள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் கூட்டணி கட்சியை பாதுகாப்பாக வைத்திருப்பார், அவர்களாகத்தான் கூட்டணியை விட்டு போவார்களே தவிர, வெளியேற்ற மாட்டார்.
அந்த வழியில்தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்,” என்றார்.
இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வியாழன், 25 ஜூன், 2026
அன்புமணியை கட்டியணைத்து கண்ணீர் சிந்திய ராமதாஸ்... பாமகவில் முடிவுக்கு வரும் குடும்ப யுத்தம்! - மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி
தைலாபுரம்,
தனது திருமண நாளில் மகன் அன்புமணியைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதன்மூலம், பாமகவில் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. ‘இனி நல்லது நடக்கும்’ என அன்புமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் பாமக தலைவர் அன்புமணி.
இதற்கு பாலமாக இருந்தவர் அவருடைய மனைவியான தருமபுரி எம்எல்ஏ சவுமியா. இதனால், தந்தை - மகன் இடையே விரிசல் ஏற்பட்டது.
2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனை நியமித்துள்ளதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேஜை மீது மைக்கை தூக்கி வீசி எதிர்வினையாற்றினார் அன்புமணி. இதனால் கோபடைந்த ராமதாஸ், என்னுடைய முடிவை ஏற்பவர்கள் கட்சியில் இருக்கலாம், இல்லையென்றால் செல்லலாம் என்றார். பனையூரில் கட்சி அலுவலகம் செயல்படும், என்னை அங்கு வந்து கட்சி நிர்வாகிகள் சந்திக்கலாம் என ராமதாஸுக்கு அன்புமணி பதிலடி கொடுத்தார்.
மாமல்லபுரத்தில் 2025 சித்திரை மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் அன்புமணியை புகழாமல், மாநாட்டுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்ததாக கூறி, திருக்கச்சூர் ஆறுமுகத்தை ராமதாஸ் பாராட்டினார். இதனால் தந்தை - மகன் இடையே விரிசல் அதிகரித்தது.
தைலாபுரத்தில் கடந்த 2025 மே 16-ம் தேதி ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை 100-க்கும் மேற்பட்டவர்கள் புறக்கணித்தனர். அவர்களை வர விடாமல் அன்புமணி தடுத்துவிட்டார் என்றார் ராமதாஸ். மேலும் அவர், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியின் பதவியில் இருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமித்தார்.
தலைமை பண்பு இல்லாதவர், கோபக்காரர், தாய் மீது பாட்டிலை தூக்கி வீசினார், நிர்வாக திறன் இல்லதாவர், மத்திய அமைச்சராக்கியது நான் செய்த பெரிய தவறு, பாஜகவுடன் கூட்டணிக்காக கணவனும், மனைவியும் எனது இரு கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர், பாமக தலைவர் என்ற பதவிக்கு மூடி சூட நாள் குறித்து மருமகள் சவுமியா நெருக்கடி கொடுத்தார் என மிக கடுமையாக மகன் மற்றும் மருமகளை ராமதாஸ் விமர்ச்சித்தார்.
மேலும், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டேன், என்னுடைய பெயரை அன்புமணி இணைந்து போடக் கூடாது, வேண்டுமென்றால் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தது பாமக தொண்டர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைக்க, தன்னிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பை பொருட்படுத்தாமல், அன்புமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தார் பழனிசாமி.
பாமக எனும் கட்சி, கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது. இது ராமதாஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நீதிமன்ற கதவுகளை தட்டியும் சாதகமான அரசியல் சூழல் ராமதாஸுக்கு ஏற்படவில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியும் கைகூடவில்லை. தந்தை, மகன் இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். இதனால் வேறு வழியின்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் கூட்டணி அமைத்து சுமார் 40 தொகுதிகளில் களம் கண்ட ராமதாஸ், அனைத்திலும் டெபாசிட் இழந்தார். பல தொகுதிகளில் 4 இலக்க எண்களில் வாக்கு கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் கிளசரின் போட்டுக் கொண்டு பேத்திகள் அழுவதாகவும், தருமபுரி அதர்மபுரியாக மாறிவிடும் என ராமதாஸின் மிக கடுமையான விமர்சனத்தையும் மீறி சவுமியா அன்புமணி உட்பட 4 பாமக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்கு பிறகு அன்புமணியின் கை ஓங்கியது. தைலாபுரத்துக்கு வருவதை பாமகவினர் குறைத்துக் கொண்டனர். யாரையும் சந்திக்காமல் பொது பிரச்சினைகளை கூறி, சில அறிக்கைகளை மட்டும் ராமதாஸ் வெளியிட்டு வந்தார்.
இதற்கிடையில் தந்தை - மகனை மீண்டும் ஒருங்கிணைக்க குடும்ப உறவுகளும், முக்கிய நபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக ராமதாஸின் திருமண நாள் சரியானதாக இருக்கும் என நாள் குறிக்கப்பட்டது.
அதன்பேரில் ராமதாஸ் - சரஸ்வதி இணையரின் 61-வது திருமண நாளை ஒட்டி, அவர்களிடம் ஆசி பெற தைலாபுரத்துக்கு மனைவி சவுமியா, மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா, இரு மருமகன்கள், பேர பிள்ளைகள் சகிதம் அன்புமணி இன்று (ஜூன் 24) வருகை தந்தார். ஆரத்தி எடுத்து ராமதாஸ் தரப்பினர் வரவேற்றனர்.
மேலும் பேர பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேர பிள்ளைகளையும் ராமதாஸ் - சரஸ்வதி கொஞ்சி மகிழ்ந்தனர். அப்போது அவர்களது கால்களில் விழுந்து அன்புமணி, சவுமியா உள்ளிட்ட அனைவரும் ஆசி பெற்றனர். ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “அப்பா - அம்மாவின் 61-வது திருமண நாள். இதனால் குடும்பத்துடன் சென்று வாழ்த்துகளையும், ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டோம். இனி, நல்லது நடக்கும்” என்றார். ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது பாமகவினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.
மூத்த மகள் ஸ்ரீகாந்தி அதிருப்தி
பாமக நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை குடும்பத்துடன் வந்து அன்புமணி சந்தித்தபோது, அவரது இளைய சகோதரி கவிதா உடன் இருந்துள்ளார். ஆனால், மூத்த மகளும் பாமக செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, அவரது மகன் முகுந்தன் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர்.
தலைவர் பதவியை தன் வசப்படுத்திக் கொண்டதாக அறிவித்த ராமதாஸ், மகனை செயல் தலைவர் பதவியில் இருக்கலாம் என்றார். இதனை அன்புமணி ஏற்கவில்லை. இதனால் மகனுக்கு வழங்கப்பட்ட செயல் தலைவர் பதவியை பறித்து, மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு ராமதாஸ் வழங்கினார்.
தந்தை - மகன் ஒன்றாக இணைந்தாலும் குடும்பத்தில் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருக்கிறது. பாமக செயல் தலைவர் பதவியில் ஸ்ரீகாந்தி இருப்பதால், கட்சியிலும் புகைச்சல் தொடரும் என்பதுதான் நிதர்சனம்.
புதன், 24 ஜூன், 2026
தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் - மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று பேசிய முதல்வர் விஜய்.
‘‘நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம். எனவே, மத்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதலை விரும்பவில்லை’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்து முதல்வர் விஜய் பேசியதாவது:
நமது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள், சிலரின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மின்வெட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.
விரைவில் இந்த மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும். சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போல், பெண்கள் பாதிக்கப்படுவதையும் இங்கு யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.
அதற்கான கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அதேபோல், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நம் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.
இவை எல்லாம் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினைகள். கடந்த 10 மாதங்களாக நமது மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்ததற்கு எல்லாம் நமது ஆட்சியில்தான் விடையே கண்டுபிடித்து இருக்கிறோம்.
போதைப் பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவியுள்ளது. இவற்றை எல்லாம் ஆரம்பக் கட்டத்திலேயே யார் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அப்போது காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருந்தது. காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே போதைப் பொருள் நடமாட்டத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை? நம்முடன் சேர்த்து மக்கள் மீதும் அவதூறு பரப்புகிறார்கள்.
மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டதும், குடும்பம் குடும்பமாக மக்கள் ஆதரவு தெரிவித்ததும் தவறு என்கிறார்கள். இது இப்போது இல்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது. எம்ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்போதும் மக்களைத் தவறாகப் பேசியிருக்கிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக ஒரே ‘டெக்னிக்'. தொழில்நுட்பம் எல்லாம் மாறி வேறு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. கொஞ்சம் டெக்னிக்கையாவது மாற்ற வேண்டும். மக்களுக்கு பயனுள்ள ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் சொல்லலாம்.
5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது. பேசு பேசு என்றால் அப்புறம் நான் என்ன செய்வது? ஆளுநர் உரையன்று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. மரபையே மாற்றி விட்டீர்கள் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள்.
அது ஞாபகம் இருக்கிறதா? தேசிய கீதத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பும், அதே நிகழ்ச்சியில் 2 முறையும் பாடப்பட்டது நினைவில் இருக்கிறதா? இதை கேட்டால் அது குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று சொல்வார்கள்.
நமது அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள். எங்களுக்கு ஒன்றும் தெரியாதுதான். எங்கள் எம்எல்ஏக்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவுக்கு, மக்கள் பணத்தை சுருட்ட தெரியாதுதான்.
உங்களைப் போல் முறைகேடுகள் செய்வதை நாங்கள் தெரிந்து கொள்ள போவதில்லை. நமது அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குப் பக்க பலமாகவும், உறுதுணையாகவும் நிற்கும். நாம் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்டவர்கள்தான்.
தற்போதைய மத்திய அரசு சார்ந்த கட்சியின் அரசியலில் கொள்கை அளவில் நேர் எதிராக நிற்கிறோம். அதே நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்புபவர்கள் அல்ல. நமக்கு எப்போதும் தமிழக வளர்ச்சி மட்டும்தான் முக்கியம்.
அதற்காக நம்முடைய அரசியல் ரீதியான கொள்கைகளையோ, மாநில உரிமைகளையோ கொஞ்சமும் விட்டு தரமாட்டோம். எனவே, நம் மக்களுக்கோ, சிறுபான்மை சகோதர்களுக்கோ, ஆதரவு இயக்கங்களுக்கோ எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
நாம் யாருடைய அணியும் இல்லை. மாநில உரிமையில் எப்போதும் உறுதியாக இருப்போம். அரசியல் வேறு, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் தெளிவாக இருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
செவ்வாய், 23 ஜூன், 2026
தமிழக சட்டசபை முட்டுக்காடுக்கு மாறுகிறதா? பரபரப்பு தகவல்
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் (2006-11) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சட்டசபை கட்டிடத்தை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியாக மாற்றினார்.
தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் சட்டசபை செயல்பட்டு வருகிறது.
கோட்டை வளாகத்தின் நெரிசலைக் குறைக்கவும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வித போக்குவரத்துப் பாதிப்பும் இன்றி எளிதாக வந்து செல்லவும் சட்டசபையை முட்டுக்காட்டில் கட்டப்படும் வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.535 கோடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மையத்தில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பார்வையாளர்களைக் கொள்ளக்கூடிய மாபெரும் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதன் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
பதிவு: வியாழக்கிழமை, ஜூலை 16, 2026, ஆனி 32, பாரபவ வருடம் 07.30 AM நாகர்கோவில், நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய...
-
பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 26, 2026, ஆனி 12, பாரபவ வருடம் 03.00 AM திருவாரூர், தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ க...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...











