செவ்வாய், 5 மே, 2026
அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜக - காங்கிரஸுக்கு கடும் சரிவு
குவஹாட்டி,
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளதால், அக்கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாலை நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவை எனும் நிலையில், 90க்கும் அதிகமான இடங்களில் வெற்றியை வசப்படுத்த உள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக 81 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 186 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியும் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 38 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அசாம் கன பரிஷத் 6.42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி 3.75 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றியும், 4 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கவுரவ் கோகாய் பாஜகவின் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமியிடம் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சுதந்திர இந்தியாவில் சுமார் 50 ஆண்டுகள் அசாமை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமில் 61 சதவீதம் இந்துக்களும் 34 சதவீதம் முஸ்லிம்களும் உள்ளனர்.
முஸ்லிம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பாஜக, ஊடுருவல்காரர்களை முழுமையாக திருப்பி அனுப்ப பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என பிரச்சாரம் செய்தது. மேலும், கவுரவ் கோகாயின் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு இருப்பதாகவும் பாஜக பிரச்சாரம் செய்தது.
பாஜகவின் இத்தகைய பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் கட்சி, இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட கட்சி என்ற பிம்பம் உருவானது. வங்கதேசத்தை ஒட்டிய மாநிலம் என்பதால், இந்து - முஸ்லிம் விவகாரம் அசாம் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது என்றே சொல்ல வேண்டும். இது மக்களிடையே குறிப்பாக இந்துக்களிடையே மத ரீதியான சிந்தனையை வலுப்படுத்தி, அவர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வழிவகுத்தது. கடந்த முறையைவிட அதிக வெற்றியை பாஜகவுக்கு தேடித்தந்துள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி - இடதுசாரிகளுக்கு படுதோல்வி!
திருவனந்தபுரம்,
கேரளாவில் 97 தொகுதிகளை கைப்பற்றியுள்ள உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
கேரள தேர்தல்
கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், 78.27% வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 15,465 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய மூன்று அணிகள் களத்தில் இருந்தபோதிலும், நேரடிப் போட்டி என்பது ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் இருந்தது.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சிகர இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், இடது ஜனநாயக முன்னணியில் சிபிஎம், சிபிஐ, ஷரத் பவாரின் என்சிபி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாரத் தர்ம ஜன சேனா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி
இந்த தேர்தலில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 97 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 63, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 22, கேரள காங்கிரஸ் 7, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 3, புரட்சிகர இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி 1, கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) 1 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், இக்கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்ற உள்ளதால் இக்கூட்டணியின் ஆட்சி உறுதியாகி இருக்கிறது.
தோல்வியில் இடதுசாரிகள்
எதிர்தரப்பில் இடது ஜனநாயக முன்னணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்றி உள்ளது. இக்கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, இம்முறை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக அமர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிகாரத்தை இழந்த இடதுசாரிகள்
கேரளாவில் பல பத்தாண்டுகளாகவே இடது ஜனநாயக முன்னணியும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். விதிவிலக்காக கடந்த 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. பினராயி விஜயன் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஜனநாயக முறைப்படி அரசு அதிகாரத்தை இடதுசாரிகள் கைப்பற்றியது கேரளாவில்தான். 1957ம் ஆண்டு இது நிகழ்ந்தது. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் இடதுசாரிகள் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவில், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள், மேற்கு வங்கத்தையும் திரிபுராவையும் இழந்த நிலையில் கேரளாவில் மட்டும் ஆட்சியில் இருந்தனர். தற்போது அங்கும் அவர்கள் ஆட்சியை இழந்துள்ளனர். இதன்மூலம், இடதுசாரிகள் நாட்டில் எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அடுத்த முதல்வர் யார்?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வருக்கான போட்டியில், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். இதில், ரமேஷ் சென்னிதாலா முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் - அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம்
சென்னை,
2026 தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது.
திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி களம் கண்டது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 (எடப்பாடி நீங்கலாக) தொகுதிகளிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.
இதில், கூட்டணி வாரியாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளும், அதில் வெற்றி பெற்ற இடங்களின் விவரமும் வருமாறு:-.
தனித்து போட்டி
தமிழக வெற்றிக் கழகம் (விசில்) - 233 - 108-ல் வெற்றி.
திமுக கூட்டணி - 73-ல் வெற்றி
திமுக (உதயசூரியன்) - 164 - 54
காங்கிரஸ் (கை) - 28 - 5
தே.மு.தி.க. (முரசு) - 10 - 1
விடுதலை சிறுத்தைகள் கட்சி (பானை) - 8 - 2
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (கதிர் அரிவாள்) - 5 - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (அரிவாள் சுத்தியல்) - 5 - 2
ம.தி.மு.க. (உதயசூரியன்) - 4 - 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஏணி) - 2 - 2
மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்) - 2 - 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) - 2 - 1
மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்) - 1 - 1
எஸ்.டி.பி.ஐ. (உதயசூரியன்) - 1 - 0
முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்) - 1 - 0
தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்) - 1 - 0
அதிமுக கூட்டணி - 53-ல் வெற்றி
அதிமுக (இரட்டை இலை) - 165 - 47
பாஜக (தாமரை) - 27 - 1
பாமக (மாம்பழம்) - 18 - 4
அமமுக (குக்கர்) - 11 - 1
தமாகா (தாமரை) - 5 - 0
புதிய நீதிக்கட்சி (இரட்டை இலை) - 1 - 0
இந்திய ஜனநாயக கட்சி (இரட்டை இலை) - 2 - 0
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தாமரை) - 1 - 0
புரட்சி பாரதம் (இரட்டை இலை) - 1 - 0
சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) - 1 - 0
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (இரட்டை இலை) - 1 - 0
தனித்து போட்டி
நாம் தமிழர் கட்சி (விவசாயி) - 234 - 0
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் த.வெ.க. வெற்றி பெற்று, 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.
என்றாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க.வுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதாவது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். ஆனால், த.வெ.க. 108 தொகுதிகளில்தான் முன்னிலை வகிக்கிறது.
த.வெ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்து என்ன நடக்கும்?.
த.வெ.க. தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
இதில், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்.
அதேநேரத்தில், அக்கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், மேலும் ஒரு இடம் குறையும். அப்படி, பார்க்கும்போது, த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தற்போதைய நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும், தே.மு.தி.க.விற்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு 4 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 1 இடமும், அம.மு.க.வுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
தி.மு.க., அ.தி.மு.க. இரு கூட்டணிகளிலும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.விற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும்.
அதன்படி கணக்கிடும்போது 108+21 என்றளவில் 129 இடங்களை பெற முடியும். ஆனால், அவ்வளவு கட்சிகளின் ஆதரவும் த.வெ.க.வுக்கு தேவையில்லை.
12 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது. இந்த கணக்கு ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நாளை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருகை தருகிறார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு 2 வாய்ப்புகளை அவர் வழங்குவார்.
ஒன்று, த.வெ.க. தலைவர் விஜய்யை அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறுவார். அல்லது, தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் இருந்து கடிதங்களை பெற்று, அதை தன்னிடம் வழங்கும்படி சொல்வார்.
118 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை கவர்னர் வழங்குவார்.
அவ்வாறு ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும்.
அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், இரண்டாவதாக அதிக இடங்களை பெற்றுள்ள தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் கோருவார்.
அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்த 6 மாதங்கள் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெறும். அதன் பின்னர் சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் மீண்டும் நடைபெறும்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் - பாமக, - விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு பெற முயற்சி
சென்னை,
சட்டசபை தேர்தல் முடிவில், த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 106 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதுகுறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக, த.வெ.க., உருவெடுத்திருப்பது மிகப்பெரிய வெற்றி. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான பலம் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கவே காங்கிரஸ் முயற்சி செய்தது.
அதற்கு தடையாக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தோல்வி அடைந்து விட்டார். இந்நிலையில், விஜய்க்கு காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போதே, ஆட்சி அமைக்க உதவுமாறு, விஜய் கோரிக்கை வைத்தார். ஆனால், 'தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும்' என, ராகுல் சொல்லி இருக்கிறார்.
ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு கிடைத்தாலும், த.வெ.க.,வுக்கு ஆட்சி அமைப்பதற்கான முழு பலம் கிடைக்காது. எனவே, ஐந்து தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பா.ம.க.,விடம் பேச்சு நடத்தப்படுகிறது. விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணியுடன் நெருக்கமாக உள்ளார்.
அதன்படி, அவரிடம் த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க, ஜான் கேட்டுள்ளார்; ஆனால், அன்புமணி இன்னும் தன் முடிவை அறிவிக்கவில்லை.
ஒருவேளை இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒருகட்சி வரவில்லை என்றால், கூடுதலாக கட்சிகளுடன் பேச்சு நடத்த வேண்டி உள்ளது. அதன்படிதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., வெங்கடேசன் வாயிலாக, அக்கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பேச்சு நடத்தப்படுகிறது.
அதேபோல், தி.மு.க., கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சு நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியிடமும் த.வெ.க., சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆதரவு கோரும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், ஜான் ஆரோக்கியசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், இத்தனை சிறு கட்சிகளுடன் பேச்சு நடத்தினாலும், பெரும்பான்மைக்கு கூடுதலாக ஒரு இடமே கிடைக்கும் என்பதால், அ.தி.மு.க.,விடம் ஆதரவு கேட்டு பெறலாம் என்ற யோசனையையும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், அக்கட்சியின் தலைவர் விஜயிடம் முன் வைத்துள்ளனர்.
இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பிடம், த.வெ.க., தரப்பில் பேசத் துவங்கி உள்ளனர். ஒருவேளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அதற்கு ஒத்துவராத பட்சத்தில், அக்கட்சியை இரண்டாகப் பிளந்து, 24 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெறும் மாஸ்டர் பிளான் திட்டமும் உள்ளது.
அக்கட்சியில் இருந்து வெளியேறி, த.வெ.க.,வில் முக்கிய தலைவராக இருக்கும் ஒருவர் வாயிலாக, இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு - மாமல்லபுரத்தில் தங்க ஏற்பாடு
ஆட்சி அமைக்க தேவையான முழு பலத்தை, த.வெ.க., பெறவில்லை. இதனால், வேறு சில கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், வெற்றி பெற்ற த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் சான்றிதழை பெற்று, சென்னையை அடுத்த, மாமல்லப்புரத்தில் உள்ள, 'போர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன்' ஹோட்டலுக்கு, இன்று மதியத்துக்குள் வர உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் விஜய் சந்திக்க உள்ளார். அதேநேரத்தில், ஆட்சி அமைக்கும் வரை, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை, அதே ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனி ஒருவனாக வென்ற 'ஜனநாயகன்' - 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு
சென்னை,
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகித்தது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவியது.
26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்த ஆளுங்கட்சியான தி.மு.க. 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தே.மு.தி.க. 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5, ம.தி.மு.க. 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டாலும், அ.தி.மு.க. 165, பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5, புதிய நீதிக்கட்சி 1, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து 233 தொகுதிகளிலும், இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.
நடிகர் விஜய் த.வெ.க.வை தொடங்கிய போதே, 'எங்கள் கட்சியுடன் யாரும் கூட்டணிக்கு வரலாம். கூட்டணிக்கு வந்தால், ஆட்சியிலும் பங்கு தரப்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார்.
தேசிய கட்சியான காங்கிரஸ், த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி 70 தொகுதிகளை உறுதி செய்ததாக கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை அக்கட்சி உறுதி செய்தது.
இப்படி, 'கடை விரித்தும் கொள்வார் இல்லை' என்ற நிலையில், சட்டசபை தேர்தலை தனித்தே சந்திக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு வந்தது.
அதுவும் ஒரு வகையில் அக்கட்சிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. தற்போது, த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்துள்ளது.
பெரும்பாலான த.வெ.க. வேட்பாளர்கள் யார்? என்று மக்களுக்கே தெரியாத போதும், விஜய் முகத்தை வைத்து விசில் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர்.
மொத்தத்தில், தனி ஒருவனாக 'ஜனநாயகன்' விஜய் வென்றிருக்கிறார்.
திங்கள், 4 மே, 2026
இன்று வாக்கு எண்ணிக்கை - தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்?
சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல் 23) நிறைவடைந்த நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்? மக்கள் தீர்ப்பு யாருக்கு? என்ற பெரும் எதிர்பார்ப்பில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தி.மு.க. மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா? அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு இன்று தெளிவான பதில்கள் கிடைக்கவுள்ளன.
காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை கட்டத்துக்கட்டமாக வெளியாகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும்.
வாக்கு எண்ணும் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் பணிகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடாக 70 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட 18 ஆயிரம் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய நாள் இன்று என்பதால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடியில் சிறப்பு தொகுப்பு - முதல்வர் விஜய் அறிவிப்பு
பதிவு: சனிக்கிழமை, ஜூன் 13, 2026, வைகாசி, 30, பாரபவ வருடம் 02:20 AM சென்னை, நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்டூர் அணை திறக்கப்படாத நில...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...






