திங்கள், 4 மே, 2026

இன்று வாக்கு எண்ணிக்கை - தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்?

 
 
 
 பதிவு:  திங்கட்கிழமை,  மே 04, 2026, சித்திரை, 21, பாரபவ வருடம் 02:25 AM

சென்னை, 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல் 23) நிறைவடைந்த நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. 

இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்? மக்கள் தீர்ப்பு யாருக்கு? என்ற பெரும் எதிர்பார்ப்பில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தி.மு.க. மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா? அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு இன்று தெளிவான பதில்கள் கிடைக்கவுள்ளன.

காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை கட்டத்துக்கட்டமாக வெளியாகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். 

வாக்கு எண்ணும் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் பணிகள் நடைபெறுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடாக 70 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட 18 ஆயிரம் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட்டுள்ளனர். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய நாள் இன்று என்பதால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 

ஞாயிறு, 3 மே, 2026

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் - புதிய இணையதள முகவரி வெளியீடு


 பதிவு:  ஞாயிற்றுக்கிழமை,  மே 03, 2026, சித்திரை, 20, பாரபவ வருடம் 03:45 AM

சென்னை, 

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை ) திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் 85 சதவீத வாக்குப்பதிவும், புதுச்சேரியில் 90 சதவீத வாக்குப்பதிவும், கேரள மாநிலத்தில் 78 சதவீத வாக்குப்பதிவும், அசாம் மாநிலத்தில் 85 சதவீத வாக்குப்பதிவும், மேற்கு வங்காளத்தில் முதல் கட்டத்தில் 93 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 92 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி இருந்தன. 

இந்நிலையில் இந்த 5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.cci.gov.in/ என்ற இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. 

இந்த இணையதள முகவரியில் வருகிற 4-ந் தேதி காலை 8 மணி முதல் 5 மாநில தேர்தல் முடிவுகளை தனித் தனி யாக உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

இது தவிர 'ECINET' மற்றும் 'Voter Helpline' என்ற செல்போன் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

46,313 டன் சமையல் எரிவாயுவுடன் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை,  மே 03, 2026, சித்திரை, 20, பாரபவ வருடம் 03:10 AM

புதுடெல்லி, 

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. 

இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள்.  இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 

இதனால், பதற்றம் சற்று தணிந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை.

இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது. இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. 

இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.  எனினும் போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

இந்த மோதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  எனினும், இந்திய கப்பல்களுக்கு ஈரான் எந்த நெருக்கடியையும் அளிக்கவில்லை.

அவை பாதுகாப்பாக கடந்து இந்தியாவை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், எம்.டி. சர்வ சக்தி என்ற பெயரிடப்பட்ட மார்ஷல் தீவுகள் கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று 46,313 டன் சமையல் எரிவாயுவை சுமந்து கொண்டு, ஹார்மூஸ் ஜலசந்தியை இன்று பாதுகாப்பாக கடந்து வந்துள்ளது.

அந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 20 ஊழியர்கள் உள்ளனர்.

இந்த கப்பல் விசாகப்பட்டினத்திற்கு வருகிற 13-ந்தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சனி, 2 மே, 2026

வணிக சிலிண்டர் விலை ரூ.993 அதிகரிப்பு - அமெரிக்கா - ஈரான் போரின் தாக்கம் - ஓட்டலில் உணவு, தேநீர் விலை, டெலிவரி கட்டணம் மேலும் உயரும்

பதிவு:  சனிக்கிழமை,  மே 02, 2026, சித்திரை, 19, பாரபவ வருடம் 02:00 AM

புதுடெல்லி, சென்னை,

ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை 81 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவு மற்றும் தேநீர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று ரூ.993 வரை உயர்த்தியுள்ளது.

இதனால், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 990.50 அதிரிகரித்து ரூ.3,237-க்கு விற்பனையாகும். தலைநகர் டெல்லியில் ரூ.2,078.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர், இனி ரூ.3,071.50-க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் ரூ.2,031-ல் இருந்து ரூ.3,024 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் போர் தொடங்கியதில் இருந்து வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது 3-வது முறை. மார்ச் மாதத்தில் ரூ.144, ஏப்ரல் 1-ல் ரூ.200 என உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சுமையை மக்கள் மீது சுமத்தும் வகையில் உணவுப் பண்டங்கள், தேநீர் விலை மற்றும் உணவுப் பொருள் டெலிவரி கட்டணத்தை ஓட்டல்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பொருளாதாரப் பேராசிரியர் விகாஸ் பிரகாஷ் சிங் கூறும்போது, “ஈரான் போரின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை மேலும் உயர்ந்து, பில்கள் அதிர்ச்சி தரக்கூடும். சிறிய சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலை, ஏழை எளிய மக்களை கவலையடையச் செய்துள்ளது” என்றார்.

வீட்டு சிலிண்டர் விலை உயரவில்லை: வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ள போதிலும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் விலையும் உயர்த்தப்படவில்லை. இது சாமானிய மக்களுக்குப் பெரும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. அதே நேரம், சர்வதேச விமான எரிபொருள்விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமான பயணத்துக்கான கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், சுமார் 4 ஆண்டுகளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இருப்பதால், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 மற்றும் டீசலுக்கு ரூ.100 நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக சந்தைஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்கு முன்பே கணித்தது

போல, தேர்தல் முடிந்ததும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது மத்திய பாஜக அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த

போது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசியப் போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சங்க நிர்வாகிகள் கருத்து

சென்னை ஓட்டல் அசோசியேஷன் தலைவர் எம்.ரவி

 மிகவும் அதிகமான விலையேற்றம் இது. இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே பெரும்பாலான இடங்களில் 50 சதவீத சிலிண்டர்கள் தான் கிடைக்கின்றன. இந்நிலையில் இல்லாத சிலிண்டருக்கு இவ்வளவு விலை கொடுப்பது நியாயமற்றது. ஏற்கெனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தமிழகம் முழுவதும் 25 சதவீத சிறிய கடைகள் மூடப்பட்ட நிலையில், அதில் இருந்து தற்போது தான் மீண்டு வந்து கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் மீண்டும் விலையேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க செயலாளர் சுந்தரம்

 அமெரிக்கா - ஈரான் போர் சூழல் நிலவி வருவதால் டீக்கடைகளுக்கு வணிக சிலிண்டர்கள் விநியோகம் செய்வதை ஏஜென்சிகள் நிறுத்திவிட்டன. ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் கொடுத்துகள்ள சந்தையில்தான் வணிக சிலிண்டர் வாங்கி வியாபாரம் செய்து வருகிறோம். இவ்வாறு ஏஜென்சிகளேகூட கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கெனவே சென்னையில் 10 சதவீத டீக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இந்த சூழலில், மீண்டும் ஆயிரம் ரூபாய் விலையேற்றம் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. 

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

வெள்ளி, 1 மே, 2026

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 05:00 AM

மதுரை,

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில்  கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்  - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு  வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார்.

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில்  எழுந்தருளினார். 

நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து நள்ளிரவு  தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. 

இதனையடுத்து அதிகாலை 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவில் முன்பாகவுள்ள  ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதை தொடர்ந்து வைகையாற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். 

வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது  வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். 

வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். 

அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களில் மத்தியில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள்  மண்டகப்படிகளில்  கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.  ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார். 

முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல். ஆணையர் அபிஷேக் தீக்‌ஷித் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

வைகையாறு முழுவதும் பக்தர்களின் வெள்ளம்போல பக்தர்களின் தலையாக காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர். 

வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

 கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.

பத்திரிக்கையாளர், யு டியூபர் வாராகி மீதான குண்டாஸ் ரத்து - ரூபாய் 50 ஆயிரம் வழங்க உத்தரவு

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 03:10 AM

சென்னை,

'யு டியூபர்' வாராகி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்றம், 'தேவையின்றி கைது செய்து, சிறையில் அடைத்ததால், வாராகிக்கு, காவல் துறை 50,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், ஆபாசமாக திட்டியதாக, அமீனால் பீவி என்பவர் அளித்த புகார் அடிப்படையில், 'யு டியூபர்' வாராகிக்கு எதிராக, பெண்ணை அவமானப்படுத்துதல், ஆபாசமாக செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாராகியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், கடந்த ஆண்டு டிச.,3 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வாராகி மனைவி நீலிமா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் அருண் அன்புமணி, பி.ராஜ்குமார் ஆகியோர் ஆஜராகி, 'சட்டவிரோத நடவடிக்கைக்கு, மனுதாரரின் கணவர் உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

குற்றச்சாட்டுகள் முற்றிலும் நியாயமற்றவை. கைதுக்கான காரணம் குறித்த தகவலும் வழங்கப்படவில்லை. எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.காவல்துறை தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் முனியப்பராஜ், மனுதாரர் தரப்பு வாதத்தை முற்றிலும் மறுத்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு

மனுதாரரின் கணவர், இந்த வழக்கில் குற்றம் இழைக்கப்பட்டதாக கூறப்படும் நேரத்தில், புகார்தாரர் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரரின் கணவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

தேவையின்றி கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்பதில், நீதிமன்றத்துக்கு எவ்வித ஐயமும் இல்லை. எனவே, அவருக்கு காவல் துறை, 50,000 ரூபாய் வழங்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை - புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்

பதிவு: வெள்ளிக்கிழமை,  மே 01, 2026, சித்திரை, 18, பாரபவ வருடம் 02:45 AM

சென்னை,

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணிக்கை அலுவலர்கள், உதவியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சம்பந்தமில்லாத நபர்கள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பை வலுப்படுத்த ‘க்யூஆர்’ குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தவிர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் இசிஐ நெட்-ல் ‘க்யூஆர் கோடு’ குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. இதிலிருந்து இம்முறையானது அமல்படுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் நீட்டிக்கப்படும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில், ‘க்யூஆர்’ குறியீடு சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.

‘க்யூஆர்’ குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் வசதிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகில் ஒரு ஊடக மையம் அமைக்கப்படும். அவர்களுக்கு நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கு, இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்

பதிவு: வியாழக்கிழமை,  மே  21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...