புதன், 6 மே, 2026
திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி. சவுத்ரி வாகன விபத்தில் மரணம்
சென்னை,
ஆர்.பி. சவுத்ரி 1998 ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சவுத்ரி ஆரம்பத்தில் இரண்டு திரைப்படம் மலையாளத்தில் தயாரித்தார்.
அதற்கு பிறகு 1990 ஆம் ஆண்டு ‘புதுவசந்தம்’ படத்தை தயாரித்து தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதுவசந்தம், புரியாத புதிர், நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
நடிகர் ஜீவாவின் தந்தையான இவர், புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பது என தனித்துவமான பாணியை பின்பற்றி பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அவருடைய பூர்வீகம்.. இந்நிலையில், ஆர்.பி. சவுத்ரி உதய்ப்பூர் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது.
திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமிக்கவோ உரிமை கோரவோ முடியாது - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உள்ள கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடையை அப்புறப்படுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்த நோட்டீசை எதிர்த்து கடை உரிமையாளர் செல்வகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர், ''ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து மாவட்ட கலெக்டரிடம் மேல் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்கிறோம்.
மேலும், கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ, உரிமை கோரவோ முடியாது.
இதை அனுமதித்தால் அது சட்டமற்ற நிலையை உருவாக்கிவிடும்.
வருவாய் துறை உத்தரவுகளின்படி, நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டவும், பொது பயன்பாடுகளுக்காகவும் ஒதுக்க வேண்டிய கிராம நத்தம் நிலங்களை வரைமுறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அதேநேரம், இதுபோன்ற கிராமநத்தம் நிலங்கள் என்பது, பேராசை பிடித்தவர்கள், ஆள்பலம், அரசியல் பலம் கொண்டவர்களால் ஆக்கிரமிப்பதற்கானது அல்ல'' என்று உத்தரவிட்டுள்ளனர்.
செவ்வாய், 5 மே, 2026
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி - 5-வது முறையாக முதல்வர் ஆகிறார் ரங்கசாமி!
புதுச்சேரி,
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைகிறது. ஐந்தாவது முறையாக ரங்கசாமி முதல்வராகிறார். இக்கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி (லஜக) தலா ஒரு இடம் என 18 இடங்களை கைப்பற்றினர்.
ஐந்து இடங்களை வென்ற திமுக எதிர்க்கட்சியாகிறது. தவெக மற்றும் கூட்டணி கட்சிகள் 3 இடங்களை வென்றுள்ளன. புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவியது.
என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே ஏற்பட்ட மோதலால் இக்கூட்டணியே குழப்பத்துடன் தேர்தலை சந்தித்தது. திமுக போட்டியிட்ட 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அத்துடன் இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டனர். அவர்களும் பிரச்சாரம் செய்யவில்லை. விசிகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் காங்கிரஸ், இடதுசாரிகள் போட்டியிட்டனர். கடும் குழப்பத்துடன் இண்டியா கூட்டணி இத்தேர்தலை புதுச்சேரியில் சந்தித்தது.
ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 4) நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்தது.
புதுச்சேரியில் 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை பனி காலை தொடங்கியது முதல் என்டிஏ கூட்டணியே முன்னிலை பெற்றது. என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 தொகுதிகளில் இக்கூட்டணி வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. என்டிஏ தலைவரான ரங்கசாமி மீண்டும் 5 வது முறையாக முதல்வராகிறார்.
திமுக 5 தொகுதிகள் வென்று எதிர்க்கட்சியாகிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. தவெக 2 இடங்களிலும், தவெக கூட்டணிக்கட்சி நேயன் மக்கள் கழகம் 1 தொகுதியிலும் வென்றுள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளனர். அதில் இருவர் என்டிஏ தரப்புக்கு நெருக்கமானவர்கள். அதனால் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.
முதல்வர் ரங்கசாமி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வென்றுள்ளார். அதனால் தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்.ஆர்.காங்கிரஸை விட சரிந்த கட்சிகள்
கடந்த முறை 10 இடங்களை வென்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ் இம்முறை 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை ஆறு இடங்களில் வென்ற பாஜக 4 இடங்களிலும், ஆறு இடங்களில் வென்ற திமுக 5 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. இரு இடங்களில் கடந்த முறை வென்ற காங்கிரஸ் இன்னும் சறுக்கி ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.
கடந்த முறை அனைத்து இடங்களிலும் தோற்ற அதிமுக இம்முறை ஒரு இடத்தில் வென்றுள்ளது. புதிதாக போட்டியிட்ட தவெக இரு இடங்களிலும், லஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரங்கசாமி கூறியதுஎன்ன?
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் வெற்றி சான்றிதழ்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“விஜய் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. புதுச்சேரியில் இரு தொகுதிகளில் தவெக வென்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில சிறப்பாக என்டிஏ அரசு ஆட்சி புரிந்தது. பல நலத் திட்டங்கள் செய்தோம். முதியோர், விதவைகளுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செய்ததை தேர்தல் மூலம் அங்கீகரித்துள்ளனர். அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். நன்றியோடு வாக்களித்துள்ளனர்.
என்டிஏ அரசு அமைய தேவையான இடங்கள் தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி. பிரதமர் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். மாநில அந்தஸ்தை தர தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. விஜய் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தமிழக மக்களுக்கு சிறந்த முறையில் விஜய் பணியாற்ற வேண்டும். எம்பி வைத்திலிங்கம் நான்காவது இடம் தள்ளப்பட்டதை கேட்கிறீர்கள். அவரை எம்பியாக்கி மக்கள் அனுப்பிய நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வந்திருக்கக் கூடாது. அதற்கு தகுந்த பாடம் தந்துள்ளனர்.
நிச்சயமாக இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும். பதவியேற்பு தேதி பின்னர் தெரிவிக்கப்படும். ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி - மம்தா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வீழ்ச்சி!
கொல்கத்தா,
மேற்கு வங்க வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் சுமார் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் பாஜக இருப்பதால், அக்கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், 92.47% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் நடைபெற்ற ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அங்கு வரும் 21-ம் தேதி மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், இன்று 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 148 தொகுதிகளில் வெற்றிபெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும் எனும் நிலையில், பாஜக சுமார் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் இருப்பதால் அக்கட்சியின் ஆட்சி அம்மாநிலத்தில் உறுதியாகி இருக்கிறது. 80+ தொகுதிகளை கைப்பற்ற உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அமர உள்ளது.
மேற்கு வங்கத்தை இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய நிலையில் உள்ளன.
சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தை 17 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெறும் நிலையில் உள்ளது. இதேபோல், 33 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெறும் நிலையில் உள்ளது.
அதேநேரத்தில், பாஜக 45 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெறக்கூடிய நிலையில் உள்ளன.
இதன்மூலம், மேற்கு வங்க களம் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான போட்டியாக மட்டுமே இருந்துள்ளது. இதில், மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. மோதல் அரசியலுக்குப் பெயர் பெற்ற மம்தா பானர்ஜிக்கு, அவரது பாணியில் கடும் போட்டியை கொடுத்தவர் பாஜகவின் சுவேந்து அதிகாரி.
1995 முதல் அரசியலில் இருக்கும் சுவேந்து அதிகாரி 2000 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர், 2000 முதல் 2020 வரை மம்தாவின் தலைமையின் அவரது கட்சியில் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கவுன்சிலராக தேர்வான சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வந்த பிறகு சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிக்கு எதிரான அரசியலை முழு வீச்சில் மேற்கொண்டார். 2021 தேர்தலில் பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, அவரை தோற்கடித்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதன்மூலம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஜக அவருக்கு வழங்கியது. நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததை அடுத்து, பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.
இம்முறையும் மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் போட்டியிட, நந்திகிராம் மற்றும் பபானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வரும் நிலையில், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகித்து வருகிறார்.
அறுதிப் பெரும்பான்மையில் பாஜக வெற்றி பெற இருப்பதால், சுவேந்து அதிகாரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எவரது பெயரையும் பாஜக அறிவிக்கவில்லை. இதனால், பாஜக மூத்த தலைவரான திலீப் கோஷ், மூத்த பெண் தலைவரான அக்னிமித்ரா பால், பாஜகவின் மாநில தலைவரான ஷமிக் பட்டாச்சார்யா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.
அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜக - காங்கிரஸுக்கு கடும் சரிவு
குவஹாட்டி,
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளதால், அக்கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மாலை நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவை எனும் நிலையில், 90க்கும் அதிகமான இடங்களில் வெற்றியை வசப்படுத்த உள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக 81 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 186 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷத் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியும் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 38 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அசாம் கன பரிஷத் 6.42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. போடோலாந்து மக்கள் முன்னணி 3.75 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றியும், 4 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கவுரவ் கோகாய் பாஜகவின் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமியிடம் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சுதந்திர இந்தியாவில் சுமார் 50 ஆண்டுகள் அசாமை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமில் 61 சதவீதம் இந்துக்களும் 34 சதவீதம் முஸ்லிம்களும் உள்ளனர்.
முஸ்லிம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பாஜக, ஊடுருவல்காரர்களை முழுமையாக திருப்பி அனுப்ப பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என பிரச்சாரம் செய்தது. மேலும், கவுரவ் கோகாயின் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு இருப்பதாகவும் பாஜக பிரச்சாரம் செய்தது.
பாஜகவின் இத்தகைய பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் கட்சி, இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட கட்சி என்ற பிம்பம் உருவானது. வங்கதேசத்தை ஒட்டிய மாநிலம் என்பதால், இந்து - முஸ்லிம் விவகாரம் அசாம் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது என்றே சொல்ல வேண்டும். இது மக்களிடையே குறிப்பாக இந்துக்களிடையே மத ரீதியான சிந்தனையை வலுப்படுத்தி, அவர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வழிவகுத்தது. கடந்த முறையைவிட அதிக வெற்றியை பாஜகவுக்கு தேடித்தந்துள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி - இடதுசாரிகளுக்கு படுதோல்வி!
திருவனந்தபுரம்,
கேரளாவில் 97 தொகுதிகளை கைப்பற்றியுள்ள உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
கேரள தேர்தல்
கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், 78.27% வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 15,465 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய மூன்று அணிகள் களத்தில் இருந்தபோதிலும், நேரடிப் போட்டி என்பது ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் இருந்தது.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சிகர இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், இடது ஜனநாயக முன்னணியில் சிபிஎம், சிபிஐ, ஷரத் பவாரின் என்சிபி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாரத் தர்ம ஜன சேனா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி
இந்த தேர்தலில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 97 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி 63, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 22, கேரள காங்கிரஸ் 7, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 3, புரட்சிகர இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி 1, கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) 1 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், இக்கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்ற உள்ளதால் இக்கூட்டணியின் ஆட்சி உறுதியாகி இருக்கிறது.
தோல்வியில் இடதுசாரிகள்
எதிர்தரப்பில் இடது ஜனநாயக முன்னணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்றி உள்ளது. இக்கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, இம்முறை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக அமர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிகாரத்தை இழந்த இடதுசாரிகள்
கேரளாவில் பல பத்தாண்டுகளாகவே இடது ஜனநாயக முன்னணியும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். விதிவிலக்காக கடந்த 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. பினராயி விஜயன் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஜனநாயக முறைப்படி அரசு அதிகாரத்தை இடதுசாரிகள் கைப்பற்றியது கேரளாவில்தான். 1957ம் ஆண்டு இது நிகழ்ந்தது. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் இடதுசாரிகள் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவில், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள், மேற்கு வங்கத்தையும் திரிபுராவையும் இழந்த நிலையில் கேரளாவில் மட்டும் ஆட்சியில் இருந்தனர். தற்போது அங்கும் அவர்கள் ஆட்சியை இழந்துள்ளனர். இதன்மூலம், இடதுசாரிகள் நாட்டில் எங்கும் ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
அடுத்த முதல்வர் யார்?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வருக்கான போட்டியில், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். இதில், ரமேஷ் சென்னிதாலா முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் - அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம்
சென்னை,
2026 தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது.
திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி களம் கண்டது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 (எடப்பாடி நீங்கலாக) தொகுதிகளிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.
இதில், கூட்டணி வாரியாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளும், அதில் வெற்றி பெற்ற இடங்களின் விவரமும் வருமாறு:-.
தனித்து போட்டி
தமிழக வெற்றிக் கழகம் (விசில்) - 233 - 108-ல் வெற்றி.
திமுக கூட்டணி - 73-ல் வெற்றி
திமுக (உதயசூரியன்) - 164 - 54
காங்கிரஸ் (கை) - 28 - 5
தே.மு.தி.க. (முரசு) - 10 - 1
விடுதலை சிறுத்தைகள் கட்சி (பானை) - 8 - 2
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (கதிர் அரிவாள்) - 5 - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (அரிவாள் சுத்தியல்) - 5 - 2
ம.தி.மு.க. (உதயசூரியன்) - 4 - 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஏணி) - 2 - 2
மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்) - 2 - 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) - 2 - 1
மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்) - 1 - 1
எஸ்.டி.பி.ஐ. (உதயசூரியன்) - 1 - 0
முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்) - 1 - 0
தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்) - 1 - 0
அதிமுக கூட்டணி - 53-ல் வெற்றி
அதிமுக (இரட்டை இலை) - 165 - 47
பாஜக (தாமரை) - 27 - 1
பாமக (மாம்பழம்) - 18 - 4
அமமுக (குக்கர்) - 11 - 1
தமாகா (தாமரை) - 5 - 0
புதிய நீதிக்கட்சி (இரட்டை இலை) - 1 - 0
இந்திய ஜனநாயக கட்சி (இரட்டை இலை) - 2 - 0
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தாமரை) - 1 - 0
புரட்சி பாரதம் (இரட்டை இலை) - 1 - 0
சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) - 1 - 0
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (இரட்டை இலை) - 1 - 0
தனித்து போட்டி
நாம் தமிழர் கட்சி (விவசாயி) - 234 - 0
“அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனைவாக்குவேன்” - ராகுல் காந்தி - இன்று ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம்
பதிவு: வியாழக்கிழமை, மே 21, 2026, வைகாசி, 07, பாரபவ வருடம் 01:30 PM புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்ததை ம...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2026, சித்திரை, 07, பாரபவ வருடம் 04:15 AM சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்த...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026, பங்குனி 17, விசுவாவசு வருடம் 06:50 AM சென்னை, நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள...
-
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026, மாசி 24, விசுவாவசு வருடம் 00:10 AM சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரி...






